KALKI 2898 AD Review 3.5/5

 KALKI 2898 AD Review 3.5/5

இயக்கம்: நாக் அஸ்வின்

நடிகர்கள்: பிரபாஸ், அமிதாப் பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோன், திஷா படானி, ஷோபனா, பசுபதி, பிரம்மானந்தம்

ஒளிப்பதிவு: DJORDJE STOJILJKOVIC

இசை: சந்தோஷ் நாராயணன்

தயாரிப்பு: வைஜேந்தி மூவிஸ்

படத்தொகுப்பு: KOTAGIRI VENKATESWARA RAO

தயாரிப்பாளர்: அஸ்வினி தத்

கதைப்படி,

மகாபாரத போரில் ஆரம்பமாகிறது கல்கியின் கதை. அஸ்வத்மனுக்கு (அமிதாப் பச்சன்) சாபம் விதிக்கிறார் கிருஷ்ணர். சாபத்தை போக்க, கலியுகத்தை காக்க மீண்டும் தான் அவதரிப்பதாக கூறிவிடுகிறார். அதுவரை அஸ்வத்மனுக்கு அழிவு இல்லை என்றும் கூறுகிறார்.

அதன்பிறகு, 6000 வருடத்திற்குப் பிறகு கதை நடக்கிறது. அந்த காலகட்டத்தில் தற்போது இருக்கும் உலகை விட அட்வான்ஸாக இருக்கிறது. ஆயுதமாக இருக்கட்டும், பறக்கும் வாகனமாக இருக்கட்டும் என அனைத்தும் வேறு விதமாக இருக்கிறது.

அதுமட்டுமல்லாமல், தண்ணீருக்கே தவிக்கும் மக்கள் இருக்கின்றனர். காசியில் மட்டுமே ஒரு உலகம் இருப்பதாக அனைவரும் அங்கு தங்கி இருக்கின்றனர்.

மேலும், கமல்ஹாசன் உருவாக்கிய சாம்ராஜ்யமாக வானுயர்ந்த நிற்கிறது “காம்ப்ளக்ஸ்”. இந்த காம்ப்ளக்ஸிற்குள் தான் சகலமும் கிடைக்கப் பெறுகிறது, இருக்கிறது. சுத்தமான காற்று, நல்ல உணவு, நீர், பசுமையான சூழல் என அனைத்தும் காம்ப்ளக்ஸில் கிடைக்கிறது.

மேலும், செயற்கை முறையில் பெண்கள் கருவுறுவதற்காக பல பெண்களை சிறைபிடித்து வைத்திருக்கிறார்கள் காம்ப்ளக்ஸை சேர்ந்தவர்கள். 3 மாத கருவின் மூலம் கிடைக்கும் சிரம் ஒன்றை கமல்ஹாசன் தன் உடலில் செலுத்திக் கொள்கிறார். தெய்வீகம் பொருந்திய ஒரு பெண்ணின் கருவில் இருக்கும் சிசுவின் சிரம் தான் தன்னை மேலும் பலமாக்கும் என அந்த பெண்ணை தேடி வருகிறார்கள் கமல்ஹாசன் டீம்…

அந்த பெண் தான் தீபிகா படுகோன். இவரும் காம்ப்ளக்ஸில் தான் இருக்கிறார். கடவுள் பிறக்கப்போகிறார் என அமிதாப்பச்சன் தனது ஞானத்தால் தெரிந்து கொள்ள, அவரைக் காப்பாற்ற குகையில் இருந்து வெளியே வருகிறார்.

உலகை விடியலுக்கு அழைத்துச் செல்வதற்காக கமல்ஹாசன் & கோ’விற்கு எதிராக ஷோபனா, பசுபதி என ஒரு தனி டீமை உருவாக்கி வைத்திருக்கிறார்கள்.

கமல்ஹாசனுக்கு எதிரான இவர்களது போராட்டம் என்னவானது.? பிரபாஸ் இதில் என்னவாக இருக்கிறார்.?? அமிதாப் பச்சன் இக்கதைக்குள் என்ன செய்கிறார்.??? என்பதற்கெல்லாம் விடை இரண்டாம் பாதியில் காட்டியிருக்கிறார்கள்..

நடித்த நடிகர்கள் அனைவரும் தங்களது கதாபாத்திரங்களை புரிந்து கொண்டு சிறப்பாக நடித்திருக்கிறார்கள். படத்தில் ஹீரோவாக தென்பட்டவர் அமிதாப் பச்சன் தான். இவரது கதாபாத்திரம் படம் முழுக்க எட்டிப் பார்த்தது படம் பார்ப்பவர்களிடையே நல்லதொரு எனர்ஜியை கொடுத்தது.

சிறப்புத் தோற்றத்தில் வந்து நடித்துச் சென்ற கதாபாத்திரமாக தான் தோன்றியது பிரபாஸின் பாத்திரம். க்ளைமாக்ஸில் மட்டுமே இக்கதையில் இவர் என்னவாக இருக்கிறார் என்று கூறியதால், இரண்டாம் பாகத்தில் தான் பிரபாஸின் வேட்டை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒருசில காட்சிகள் என்றாலும், கமல்ஹாசனின் வில்லன் தோற்றம் மிரள வைத்திருக்கிறது. உலகநாயகனாக இவரது தோற்றமும் அனைவரையும் கவரும். இவரது கதாபாத்திரமும் இரண்டாம் பாகத்தில் தான், பெரிதளவில் வேலை செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கல்கியின் உலகை புரிந்து கொள்ளவே சிறிது நேரம் எடுத்துக் கொள்வதால், படத்திற்குள் பயணிக்க சற்று சிரமம் என்றாலும், போக போக கதைக்குள் நாம் எளிதாக சென்றுவிடலாம்.

இரண்டாம் பாதி அதிரடியாக செல்வதால், நம்மையும் கதைக்குள் இழுத்துச் சென்று விடுகின்றனர்.

ஒளிப்பதிவு படத்திற்கு மிகப்பெரும் பலம். பின்னணி இசையில் சந்தோஷ் நாராயணன் அதிரடி காட்டியிருக்கிறார். தீபிகா படுகோன், ஷோபனா, பசுபதி என மற்ற கதாபாத்திரத்தில் நடித்தவர்களும் தங்களது கேரக்டர்களை சிறப்பாக செய்து முடித்திருக்கிறார்கள்.

சிஜி பணிகள் பெரிதாகவே கைகொடுத்திருக்கிறது.

கல்கி – இந்திய சினிமாவில் புதிய முயற்சி.. வாழ்த்துகள் டீம்

Related post